News Channel

தாக்கத்தை ஏற்படுத்திய கோவை மண்டல ஊழியர்கள் மாநாடு!

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு சார்பாக நடைபெற்ற கோவை மண்டல ஊழியர்கள் மாநாடு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

கோவை மண்டல ஊழியர்கள் மாநாடு ஜூலை 6, 7 ஆகிய தேதிகளில் கரும்புக்கடை இஸ்லாமியா பள்ளி மைதானத்தில் வைத்து நடைபெற்றது. ஜமாஅத் ஊழியர்களின் மனிதவள மேம்பாடு, தர்பியா, தஸ்கியா உள்ளிட்டவற்றை மையமாக வைத்து நடைபெற்ற இம்மாநாடு ஊழியர்களிடையே பெரும் தாக்கத்தையும், இஸ்லாமிய உணர்வையும் ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது.

கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, உடுமலை, பொள்ளாச்சி, ஊட்டி மற்றும் குன்னூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஊழியர்கள் முன்னூறுக்கும் மேற்பட்டவர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் ஜமாஅத் தமிழகத் தலைவர்கள், ஆளுமைகள் ஊழியர்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கி கலந்துரையாடினர். ஊழியர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், உறுப்பினராக ஆக வேண்டியதன் அவசியம் குறித்தும் கருத்தரங்கங்கள் நடைபெற்றன.

களத்தில் பணியாற்றுவதில் உள்ள சவால்கள், தஸ்கியா, தர்பியாவுக்கு வழங்கப்பட வேண்டிய முக்கியத்துவங்கள், இயக்க ஊழியர்களின் ஆரோக்கியம், அழைப்பியல் பணியில் நாம் வழங்க வேண்டிய பங்களிப்பு, கூட்டமைப்பு, அரசியல், மறுமை வெற்றி, முஸ்லிம் சமூக சீர்திருத்தம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் உரைகள் நடத்தப்பட்டன.

இம்மாநாட்டில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு தலைவர் மௌலவி. முஹம்மது ஹனீஃபா மன்பஈ அவர்கள் தலைமையுரையாற்றி ஊழியர்களிடையே உற்சாகத்தையும், களத்தில் பணியாற்றும் உத்வேகத்தையும் ஏற்படுத்தினார். தொடர்ந்து அமைப்புச் செயலாளர் ஜனாப். K. ஜலாலுதீன் சாஹிப், துணைத் தலைவர் ஜனாப். I.ஜலாலுதீன் சாஹிப் ஆகியோரும், மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் ஜனாப். P.S. உமர் ஃபாரூக், ஜனாப். அஜீஸ் லுத்ஃபுல்லாஹ், ஜனாப். P. முஹம்மது யூசுப், ஜனாப். V.S. முஹம்மது அமீன் ஆகியோரும் கலந்துகொண்டு ஊழியர்களிடையே உரையாற்றினர்.

மேலும் இஸ்லாமிய அறிஞர்கள் மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி, மௌலவி. நூஹ் மஹ்ழரி, மௌலவி. முஹம்மது சித்தீக் மதனி ஆகியோர் சிறப்பான ஆய்வுரைகளை வழங்கினார்கள்.

தொடர்ந்து மண்டல அமைப்பாளர் ஜனாப். சையது முஹம்மது அவர்களும், மாநிலச் செயலாளர் ஜனாப். சாகுல் ஹமீது அவர்களும், கோவை மத்திய மண்டல தலைவர் ஜனாப். பீர் முஹம்மது அவர்களும் ஊழியர்களிடையே உரையாற்றினார்கள்.

இறுதியாக நிறைவுரையாற்றிய அமீரே ஹல்கா மௌலவி. முஹம்மது ஹனீஃபா மன்பஈ அவர்கள் இம்மாநாடும், ஊழியர்கள், உறுப்பினர்களின் அர்ப்பணிப்பும் நிறைவைத் தருவதாகவும். இம்மாநாட்டின் வெற்றி என்பது அடுத்த ஊழியர்கள் மாநாடு நடைபெறும்போது இங்கு இருப்பவர்கள் உறுப்பினர்களாகவும், இங்கு இருப்பவர்களை விட பன்மடங்காக புதிய ஊழியர்கள் அரங்கை நிறைத்து இருப்பதே வெற்றியாகும் என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர் இஸ்லாமிய இயக்கம் மக்களின் கருத்தை மாற்றி அமைத்து இகாமத்து தீன் எனும் பெரும் வெற்றியை இம்மண்ணிலும், நாளை மறுமையில் நாம் ஒவ்வொருவரும் வெற்றி அடைவதை நோக்கமாக கொண்டு களத்தில் இறங்கி பணியாற்றுவோம் என்றும் குறிப்பிட்டார்.

மாநாடு குறித்து கருத்து தெரிவித்த ஊழியர்கள், மாநாட்டின் ஏற்பாடு முதல்கொண்டு அனைத்தும் மன நிறைவைத் தந்ததாகவும், களத்தில் பணியாற்றும்போது ஏற்பட்ட அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் கிடைத்ததாகவும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அல்ஹம்துலில்லாஹ்.