News Channel

போரும் அமைதியின்மையும் எவருக்கும் பயன்தராது.

போரும் அமைதியின்மையும் எவருக்கும் பயன்தராது.

ஜமாஅத் தலைவர் திட்டவட்டம். 

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பதற்றமும், குண்டுவீச்சும், தாக்குதல்களும் தொடர்ந்து நடந்து வருவது கடும் வேதனையைத் தருகின்றது. மோதல் போக்கை நீடிக்கின்ற எண்ணம் கிடையாது என்று இந்திய அரசாங்க அதிகாரிகள் அறிவித்து இருந்தனர். இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும்.  முழுமையான அமைதியை நிலைபெறச் செய்வதற்காக வெகுவிரைவில் தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் நாம் எதிர்பார்க்கின்றோம். 

இரண்டு நாடுகளுமே பசி, பட்டினி போன்ற பிரச்னைகளைக் கட்டுக்குள் கொண்டு வருவதிலும், தம்முடைய நாட்டு மக்களின் வளத்தையும் செழிப்பையும் முன்னேற்றத்தையும் உறுதி செய்வதிலும் தொடர்ந்து முனைப்புடன் பாடுபட்டு வருகின்றன. இரண்டு நாடுகளுமே அணு ஆயுத வல்லமை பெற்ற நாடுகளாகவும் இருக்கின்றன. இந்த நிலையில் போரும் அமைதியின்மையும் பதற்றமும் எந்தத் தரப்பினருக்கும் பயன் தராது. அவற்றால் இரண்டு நாடுகளின் ஏழை எளிய மக்கள்தாம் மிகப்பெரும் அளவில் இழப்புக்கு ஆளாவார்கள். இரண்டு நாடுகளும் அவற்றின் ஆட்சித் தலைவர்களும், இராணுவத் தலைவர்களும் நிலையான அமைதியை உறுதிப்படுத்தி நிலைநிறுத்தச் செய்வதற்காக தக்க நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்றே நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.  

எல்லைப் புறங்களில் வசிக்கின்ற பொதுவான இந்தியக் குடிமக்களின் உயிரிழப்புகள் பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்தவாறு இருக்கின்றன. எந்தப் பாவமும் செய்யாத குடிமக்கள் எதிர் கொண்டிருக்கின்ற அச்சுறுத்தலையும் ஆபத்தையும் நீக்குவதுதான் நம்முடைய உடனடிக் கவனத்துக்குரியதாகும். இதயத்துக்கினியவர்களை இழந்து தவிக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அந்தக் குடும்பங்களின் துயரத்தைத் துடைப்பதற்காக மிக விரைவாக அவர்களுக்கு தேவையான, அவசிய உதவிகளைத் தருமாறும் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் நாம் அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கின்றோம். இதற்கு முன்னுரிமை அளிக்குமோறு அறிவுறுத்துகின்றோம். 

எல்லையின் அந்தப் புறத்திலும் அப்பாவிகள் கொல்லப்பட்ட விவரத்தை ஊடகச் செய்திகள் அறிவிக்கின்றன. 

பொதுவான சாமான்யர்களின், அப்பாவி குடிமக்களின் மரணங்கள் குறிப்பாக பெண்களின், குழந்தைகளின் மரணங்கள் - அவர்கள் எந்தச் சமூகத்தை, மதத்தை, இனத்தை, மொழியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் - மிக மிக வருத்தத்துக்குரியவையாகும். எந்த நிலையிலும் அப்பாவி குடிமக்களுக்கு ஊறு நேராமல் பார்த்துக் கொள்வதும் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் எல்லாத் தரப்பினரின் மீதும் உள்ள கூட்டுப் பொறுப்பாகும். 

இந்தியத் துணைக்கண்டத்தின் மிகப் பெரும் பிரச்னையாக பயங்கரவாதம் இருக்கின்றது. நம்முடைய நாட்டில் விலைமதிப்புமிக்க ஏராளமான உயிர்கள் அதற்குப் பலியாகியிருக்கின்றன. பாகிஸ்தானிலும் பயங்கரவாதத்துக்கு மக்கள் தொடர்ந்து இரையாகி வருகின்றார்கள். எல்லாவிதமான குறுகிய இலாபங்களிலிருந்து மேலெழுந்து நின்று இந்த அசல் பிரச்னையைத் தீர்ப்பதன் பக்கம் கவனம் செலுத்துவது காலத்தின் கட்டாயமாகும். 

- சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி
அகில இந்தியத் தலைவர்
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்