News Channel

பத்திரிக்கை அறிக்கை

"கடுமையான தண்டனை வழங்க வேண்டும்"


24-05-2026

கோவையில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: 

குற்றவாளிகளுக்குக் காலதாமதமின்றி உச்சபட்சத் தண்டனை வழங்க வேண்டும்! 

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநிலத் தலைவர் 
மௌலவி முஹம்மது ஹனிபா மன்பயீ அவர்கள் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் 

கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ள நிகழ்வு ஒட்டுமொத்த மனிதநேயச் சமூகத்தையும் உலுக்கியுள்ளது. பார்ப்பவர் நெஞ்சைப் பதறவைக்கும் இந்த அநாகரிக, காட்டுமிராண்டித்தனமான செயலை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு சார்பாக மிக வன்மையாகக் கண்டிக்கிறோம்.

பெற்றோருக்கும், குடும்பத்தாருக்கும் பேரிழப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்நிகழ்வு, ஒட்டுமொத்தத் தமிழகத்திற்கே ஒரு பெரும் அவமானக் கறையாகும். 
தங்களின் பிள்ளைகளைப் பாதுகாப்பாக வளர்க்க முடியுமா என்ற அச்சத்தையும், பெரும் கவலையையும் தமிழக மக்களிடையே, குறிப்பாகப் பெற்றோர்களிடையே இந்தச் சம்பவம் தீவிரமாக விதைத்துள்ளது.

இத்தகைய கொடூரக் குற்றங்களில் ஈடுபடும் மனித மிருகங்களுக்குச் சட்டத்தின் முன் எந்தவிதமான தளர்வுகளோ, சலுகைகளோ காட்டப்படக் கூடாது. 
இக்கொலை வெறிச் செயலில் ஈடுபட்ட இருவரையும் 
சட்டப்படியான 'உச்சபட்சக் கடுமையான தண்டனை' மிக விரைவாக வழங்கப்பட வேண்டும்.

 தண்டனைகள் தாமதமாவது இதுபோன்ற குற்றவாளிகளுக்குத் தைரியத்தையே வரவழைக்கும் என்பதால், 
இந்த வழக்கில் நீதி உடனே நிலைநாட்டப்பட வேண்டும்.

தமிழக அரசுக்கு நாங்கள் வைக்கும் மிக முக்கியமான கோரிக்கை என்னவெனில், பெண் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் எதிரான குற்றங்களில் அரசு மிகத் தீவிரமான, சமரசமற்ற இரும்புக்கர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

இனிவரும் காலங்களில் தமிழ்நாட்டின் எந்தவொரு பகுதியிலும் இப்படியொரு கொடூரமான நிகழ்வு கற்பனையிலும் கூட நினைத்துப் பார்க்க முடியாதவாறு அரசு சட்டத்தையும், பாதுகாப்பையும் பலப்படுத்த வேண்டும்.

 "இனி தமிழ்நாட்டில் இதுவே இதுபோன்ற கடைசி நிகழ்வாக இருக்க வேண்டும்" என்கின்ற உறுதியோடும், அந்த உத்வேகத்தோடும் தற்போதைய அரசு செயல்பட வேண்டும் என்று மிக உறுதியோடு கேட்டுக் கொள்கிறேன்.

பாதிக்கப்பட்ட அச்சிறுமியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

அவர்களுக்கு உரிய நீதியும், தார்மீக ஆதரவும், தகுந்த நிவாரணமும் உடனடியாகக் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.