ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், பாலக்கரை வட்டத்தின் சார்பில் ஹஜ் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி 15.06.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை 7 மணியளவில் திருச்சி முதலியார்சத்திரம் KMS ஹக்கீம் அரங்கில் நடைபெற்றது.
துவக்கமாக, இறைமறை வசனங்களை அஸ்ஸலாம் கல்லூரி மாணவர் முஹம்மது இம்ரான் ஓதினார். ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், திருச்சி கிளைத் தலைவர் முனைவர். ஹஜ் மொய்தீன் துவக்கவுரை நிகழ்த்தினார். கல்லுக்குழி புனித அந்தோனியார் ஆலய பங்குத்தந்தை மற்றும் புனித ஜான்பால் உரையாடல் மன்ற இயக்குநர் அருட்பணி முனைவர். க.சார்லஸ் அவர்களுக்கும், திருச்சி நாகப்பா கார்ப்பரேஷன் உரிமையாளர் திருமிகு. நாகப்பா லெட்சுமணன் அவர்களுக்கும் ‘சமய நல்லிணக்க விருது’ வழங்கி கவுரவிக்கப்பட்டது. விருதுகளைப் பெற்ற இருவரும் தங்களது சமய நல்லிணக்க அனுபத்தை பகிர்ந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். திருச்சி மாவட்ட பைத்துல்மால் அறக்கட்டளை தலைவர் டாக்டர் ச. சாகுல் ஹமீது சமுதாயத்தில் நடைமுறையிலிருக்கும் பழக்கவழங்களைச் சுட்டிக்காட்டி விளக்கமளித்தார்.
சமரசம் இதழின் பொறுப்பாசிரியர் ஜனாப். வி. எஸ். முஹம்மது அமீன் அவர்கள் ‘ஹஜ் பெருநாள்’ சிறப்புரையாற்றினார். அவர் தம் உரையில், ‘ஹஜ் பெருநாள்’ கொண்டாடுவதன் காரணத்தையும், நபி இப்ராஹீம் அவர்களின் முற்போக்குச் சிந்தனைகளையும் தெளிவாக விளக்கினார். மேலும், தற்காலத்தில் அமைதியை சீர்கெடுக்கும் காரணிகளையும், சிற்பான்மையினர் சந்திக்கும் சிக்கல்களையும், அதற்கான தீர்வுகளையும், பரஸ்பர புரிதலுக்கான அவசியத்தையும், தமிழகத்தின் சமூக நல்லிணக்கத்தின் சிறப்புகளையும் எடுத்துக் கூறினார்.
இறுதியாக, சகோ. அ. உமர் பாரூக் அனைவருக்கும் நன்றிக் கூறினார். சகோ. அஜ்மல் கான் மற்றும் சகோ. தவ்ஃபிக் நிகழ்வை சிறப்பாக தொகுத்து வழங்கினர். கல்வியாளர்கள், அதிகாரிகள், ஊடகத்தினர், வணிகர்கள், ஊழியர்கள் என பல சமயங்களைச் சேர்ந்த சகோதர சகோதரிகள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். ரிஃபா சேம்பர் ஆப் காமர்ஸ் நிர்வாகிகள் ஜனாப். காஜா மொய்தீன் மற்றும் ஜனாப். பாரத் ஷாஜஹான் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அனைவருக்கும் ‘ஹஜ்ஜின் நாயகர்’ நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டதுடன் சுவையான இரவு உணவும் பரிமாறப்பட்டது.
பாலக்கரை வட்ட ஊழியர்கள் ஏற்பாடுகளை வெகுச் சிறப்பாக செய்திருந்தனர்.