News Channel

பத்திரிக்கை அறிக்கை

வக்ஃப் சட்டத்தை ரத்து செய்யவும், இஸ்ரேலை கண்டிக்கவும், நியாயமான உலகளாவிய பொருளாதார ஒழுங்கமைப்பு, அரசியலமைப்பு மற்றும் தார்மீக விழுமங்களை பாதுகாக்கவும், பொது சிவில் சட்டத்தை நிராகரிக்கவும் ஜமாஅத் பிரதிநிதிகள் சபை வலியுறுத்தல்.

புது தில்லி: ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தலைவர் சையத் சஆதத்துல்லா ஹுசைனியின் தலைமையில் பிரதிநிதிகள் சபைக் கூட்டம் 2025 ஏப்ரல் 12 முதல் 15 வரை தலைமையகத்தில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில், தேசிய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து பல முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
சமீபத்திய சட்டசபை செயல்பாடுகள், 
இனவாத பதட்டங்கள், பொருளாதார அநீதி, மற்றும் உலகளாவிய ஒடுக்குமுறை, குறிப்பாக பாலஸ்தீனத்தில் நடைபெறுபவை ஆகியவற்றின் மீது கடும் கவலையை சபை வெளிப்படுத்தியது. நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்களின் சுருக்கம் கீழே தரப்பட்டுள்ளது:

1. "வக்ஃப் திருத்தச் சட்டம், 2025-ஐ ரத்து செய்தல்"
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சமீபத்தில் இயற்றப்பட்ட வக்ஃப் திருத்தச் சட்டம், 2025 ஐ அரசியலமைப்பிற்கு விரோதமானது, 
அநீதி மற்றும் பாரபட்சமானது என்று வன்மையாகக் கண்டனம் செய்தது. 

இந்த சட்டம் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு வக்ஃப் சர்ச்சைகளில் தீர்ப்பளிக்கும் அதிகாரத்தை வழங்கியுள்ளது என்றும், 
பல நூற்றாண்டுகள் பழமையான மத சொத்துக்களை, குறிப்பாக ஆவணப்படுத்தப்படாத ஆனால் முஸ்லிம் சமூகத்தால் வரலாற்று ரீதியாக பயன்படுத்தப்பட்டவற்றை ஆக்கிரமிக்கவும், 
பறிமுதல் செய்யவும் கதவைத் திறந்துவிட்டது என்றும் பிரதிநிதிகள் சபை கருதிகிறது. 

இந்தச் சட்டம் சம்பந்தப்பட்டவர்களின் எதிர்ப்புகளை புறக்கணித்துள்ளது, 
மத நிறுவனங்களின் சுயாட்சியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது மற்றும் அரசியலமைப்பின் 26 வது பிரிவை மீறியுள்ளது.
இந்தச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் நடத்தும் பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் 
ஜமாஅத் கேட்டுக்கொண்டது. 
அதன் விளைவுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு ஜனநாயக அமைப்புகள், 
சிவில் சமூகம் மற்றும் அறிவுஜீவிகள் ஆகியோருக்கு அது வேண்டுகோள் விடுத்தது. எதிர்ப்புத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைப்புகளை பிரதிநிதிகள் சபை பாராட்டுகிறது, 
மேலும் நீதி மீட்கப்படும் வரை தொடர்ந்து அழுத்தம் கொடுக்குமாறு பிரதிநிதிகள் சபை வலியுறுத்தியது.

2. "பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் தாக்குதலுக்கு கண்டனம்"

காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை நமது காலத்தின் மிக மோசமான மனிதாபிமான கொடூரங்களில் ஒன்றாக பிரதிநிதிகள் சபை வர்ணித்துள்ளது, 
இதில் 60,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் இன்னும் பலர் காயமடைந்தனர்.
பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் அகதிகள் முகாம்களை அழிப்பதை கண்டனம் செய்ததுடன், நிவாரணப் பணியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை இலக்கு வைத்து கொல்வதையும் பிரதிநிதிகள் சபை கண்டனம் செய்தது.
உடனடி போர்நிறுத்தம், காசாவில் மனிதநேய வழிகள் திறப்பு, மற்றும் பாலஸ்தீன இறையாண்மையை அங்கீகரித்தல் ஆகியவற்றிற்கு ஜமாஅத் அழைப்பு விடுத்தது. பாலஸ்தீனத்திற்கு ஆதரவான வரலாற்று நிலைப்பாட்டை இந்தியா நிலைநிறுத்த வேண்டும் என்றும், இஸ்ரேலுக்கு அனைத்து வகையான ஆதரவையும் நிறுத்த வேண்டும் என்றும், நீதிக்காக தனது இராஜதந்திர பலத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் ஜமாஅத் கோரியது. 
இஸ்ரேலிய வணிகங்களுக்கு எதிரான புறக்கணிப்பு மற்றும் பொருளாதாரத் தடைகளை வலியுறுத்தியது, உலக மாணவர் போராட்டங்களை பாராட்டியதுடன், ஒடுக்குமுறை ஒருபோதும் நிரந்தரமாக இருக்காது என்பதை சர்வதேச சமூகத்திற்கு ஜமாஅத் நினைவூட்டியது.

3. "நீதிமிக்க உலக பொருளாதார ஒழுங்கமைப்பிற்கான அழைப்பு"

பாதுகாப்புக் கொள்கைகளால், குறிப்பாக அமெரிக்காவால், அதிகரித்து வரும் உலக வர்த்தக நெருக்கடி குறித்து ஜமாஅத் கவலைத் தெரிவித்துள்ளது. 
இந்த நடவடிக்கைகள், முதலாளித்துவ பேராசை, நச்சு தேசியவாதம், மற்றும் பொருளாசை ஆகியவற்றின் ஆபத்துக்களை பிரதிபலிப்பதாகவும், ஏழை மற்றும் வளரும் நாடுகள் மீது மிக அதிகமாகச் சுமையை சுமத்துவதாக ஜமாஅத் கூறியது.
வர்த்தக கூட்டாண்மைகளை பல்வகைப்படுத்தவும், அமெரிக்காவின் சார்புநிலையை குறைக்கவும், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குழுக்களுக்கு திட்டமிட்ட நிவாரணத்தை வழங்கவும் இந்திய அரசை ஜமாஅத் வலியுறுத்தியது. 
இந்த உலகளாவிய நெருக்கடியை (குறிப்பாக ஓரங்கட்டப்பட்ட குழுக்களுக்கு) தன்னிறைவு மற்றும் அறம்சார்ந்த பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான ஒரு வாய்ப்பாக அரசாங்கம் கருத வேண்டும், மேலும், வட்டி இல்லாத நிதியை ஊக்குவிக்க வேண்டும். செல்வம் அல்லது அதிகாரத்தின் அடிப்படையில் அல்லாமல், நீதி மற்றும் இரக்கத்தின் அடிப்படையில் உலகளாவிய தலைமைத்துவத்தை ஏற்படுத்த ஜமாஅத் வலியுறுத்தியது.

4. "அரசியலமைப்பு மற்றும் தார்மீக விழுமங்களை பாதுகாத்தல்"

சமூக வெறுப்பு அதிகரித்து வருவது, முஸ்லிம் சொத்துக்களை அரசு ஆதரவுடன் இடிப்பது, அமைதியான வழிபாட்டை சீர்குலைப்பது, மசூதிகள் மற்றும் மதராஸாக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது குறித்து ஆழ்ந்த கவலை தெரிவிக்கப்பட்டது. 
இந்த போக்குகள் தேசிய ஒற்றுமைக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக எச்சரித்து, தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட அமலாக்கத்தை கவுன்சில் கண்டனம் செய்தது.
அனைத்து குடிமக்களையும் சமமாக நடத்துவதற்கான அரசிலமைப்புச் சட்டத்தின் கடமைகள் குறித்து அரசிற்கு நினைவூட்டப்பட்டன, 
அதே நேரத்தில் தீவிரவாத குழுக்கள் தங்கள் பிளவுபடுத்தும் சதித்திட்டங்களை கைவிடுமாறு வலியுறுத்தப்பட்டன. 
நன்மையை ஊக்குவிக்கும், தீமையைத் தடுக்கும் தார்மீகக் கடமையை முஸ்லிம் சமூகம் நிறைவேற்ற வேண்டும் என்றும், அமைதி மற்றும் நீதிக்காக ஆக்கப்பூர்வமாக பணியாற்ற வேண்டும் என்றும் ஜமாஅத் வலியுறுத்தியது.

5. "பொருளாதார அநீதி மற்றும் பொதுமக்களை சுரண்டல்"

இந்தியாவின் குறிப்பிட்டத் துறைசார் பொருளாதார வளர்ச்சிக்கும், அதிகரித்து வரும் சமத்துவமின்மைக்கும் இடையே உள்ள முரண்பாட்டையும், கிராமப்புறத் துறைகள், சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் முறைசாரா பொருளாதாரம் ஆகியவை புறக்கணிக்கப்பட்டிருப்பதையும் பிரதிநிதிகள் சபை கூட்டத்தில் சுட்டிக்காட்டியது. 
அதிகரித்து வரும் மறைமுக வரிகள், குறைந்து வரும் மானியங்கள், பெருநிறுவனங்களுக்கு வழங்கப்படும் பாரிய சலுகைகள் ஆகியவை வறுமை மற்றும் வேலையின்மையை மோசமாக்கியுள்ளன, அதே நேரத்தில் சிறுபான்மை நலத்திட்டங்கள் திட்டமிட்டு ரத்து செய்யப்படுகின்றன.
சமமான செல்வப் பங்கீட்டை உறுதிப்படுத்தும், சுகாதாரம் மற்றும் கல்விக்கான செலவினங்களை அதிகரிக்கும், சிறு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஆதரவளிக்கும், உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்க வட்டி இல்லாத நிதி அமைப்புகளை செயல்படுத்தும் ஒரு நல்வாழ்வு-சார்ந்த பொருளாதார முன்மாதிரியை உருவாக்க ஜமாஅத் கோரிக்கை வைத்துள்ளது.

6. "பொது சிவில் சட்டத்தை நிராகரித்தல் (UCC)"

தனியார் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான மத சமூகங்களின் அரசியலமைப்பு உரிமைகளை மீறுவதைச் சுட்டிக்காட்டி, 
பொது சிவில் சட்டத்தை திட்டவட்டமாக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நிராகரித்துள்ளது. 
உத்தரகாண்ட் மாநிலத்தில் சமீபத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி, ஒற்றுமை என்ற போர்வையில் முஸ்லிம்களை குறிவைப்பது அரசியலமைப்பிற்கு விரோதமானது மற்றும் சமூகப் பிரிவினைக்குரியது என்று பிரதிநிதிகள் சபை கூறியது.
உத்தரகாண்டில் பொது சிவில் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், குஜராத்தில் இதுபோன்ற நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும் சபை கோரியுள்ளது. 
இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு சட்டப் பன்முகத்தன்மை இன்றியமையாதது என்றும், எந்தவொரு ஒருதலைப்பட்சமான மற்றும் ஒருமித்த இசைவில்லா சட்டத்தையும் எதிர்க்க வேண்டும் என்றும் அது வலியுறுத்தியது.

வெளியீடு:
சல்மான் அஹ்மத் 
தேசிய உதவி செயலாளர், 
ஊடகத் துறை.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்,
புது தில்லி.