ரமலானே வருக ! சிறப்பு நிகழ்ச்சி
இராமநாதபுரம் சிக்கல் பகுதியில் உள்ள ஓடை குளம் பகுதியில் 24. 2 .2025 திங்கட்கிழமை மாலை ஆறு முப்பது முதல் எட்டு முப்பது மணி வரை நடைபெற்றது.
இச்சிறப்பு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மண்டல அமைப்பாளரும் மதுரை இஸ்லாமிக் சென்டர் துணைச்செயலாளருமான ஜனாப்; நஜீர் ஹுசைன் அவர்கள் கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு ஓடைகுளம் ஜமாத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியை ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் ஊழியரும் ஓடைகுளம் ஜும்மா பள்ளிவாசலின் இமாமான மௌலவி ஆதம் அலி ஃபைஜி அவர்கள் ஏற்பாடு செய்து அழகுற வழி நடத்தினார்.
சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த ஜனாப் நஜீர் ஹுசைன் அவர்கள் ரமலானே வருக என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார், அவர் உரையில் கூறுகின்ற பொழுது மனித குலத்திற்கு அல்லாஹுத்தஆலா ஒவ்வொரு ஆண்டும் இந்த ரமலானை வழங்குகின்றான். ரமலான் வருவதின் நோக்கம் நன்மைகள் செய்து நற்கூலியை பெற்று இறைவனை அடைவது என்று ஒரு நிலை இருந்தாலும், தன்னைத்தானே அந்த மனிதன் பரிசுத்தவானாக உருவாக்கிக் கொள்வதற்கான பயிற்சியாக இந்த ரமலானை வழங்கி இருக்கின்றான்! இஸ்லாத்தைப் பொறுத்த வரைக்கும் நன்மை சொல்லப்படுவதை போலவே தீமையிலிருந்து விலகி இருப்பதையும் இஸ்லாம் நமக்கு சுட்டிக்காட்டுகின்றது. எப்படி நன்மை ஏவுகின்றோமோ அதே போல் தான் தீமையும் நாம் தடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு மனிதன் அவனுடைய வாழ்வில்
* பொய் பேசுகின்றான்
* புறம் பேசுகின்றான்
* அவதூறு பேசுகின்றான்
* சூழ்நிலையில் ஏற்படுகின்ற போது திருடுகிறான்
* தவறான நிலையில் அவன் பயணிக்கின்றான்.
* மது அருந்துகின்றான்
* விபச்சாரம் செய்கின்றான்
இப்படி சிறிய பாவத்திலிருந்து பெரிய பாவம் வரை மனிதன் தன் நிலையை கட்டுப்பாட்டுக்குள் வைக்காமல் இறைவனுடைய பயம் இல்லாமல் வாழ்கின்ற பொழுது யாராக இருந்தாலும் தவறுகள் செய்வதை இன்றைக்கு கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதில் எந்த ஒரு மதத்தவர்களும் எந்த ஒரு மனிதனும் விதிவிலக்கு அல்ல ! எப்பொழுது ஒரு மனிதன் தன்னை தூய்மையானவனாக யோகியவனாக மாற்றிக் கொள்வான் என்றால், அவனுக்கு கடவுள் பக்தி வருகின்ற பொழுது
கடவுள் பயம் வருகின்ற பொழுது
தவறு செய்வதற்கு அவன் பயப்படுவான்.
கடவுள் பயபக்தியான இந்த நிலை?
* எந்த கல்லூரியிலும் பயிற்சி அளிக்கப்படாது
* எந்த பள்ளிக்கூடத்தில் பயிற்சி அளிக்கப்படாது
* எந்த பாடநூலும் இல்லை
இதற்கு ஒரே நிலை கடவுளை முழுமையாக அவன் நம்பி.
கடவுள் என்னை கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்து. கடவுளுக்கு அஞ்சி வாழுகின்ற பொழுதுதான் அவன் நல்லதை செய்வான். தீமையில் இருந்து அவன் விலகி இருப்பான் இதைத்தான் இஸ்லாம் ரமலான் மூலம் முஸ்லிம்களுக்கு ஆண்டுதோறும் பயிற்சி அளிக்கிறது.
உலகத்திலே எங்கேயும் தரப்படாத பயிற்சி இஸ்லாமிய மார்க்கத்தில் ஒவ்வொரு ஆண்டும்
* சிறப்பான முகாமாக
* மாநாடாக அல்லது
* பயிற்சி காலமாக இந்த ரமலானை இறைவன் மனித குலத்திற்கு அருளி இந்த ரமலானில் நீங்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை குர்ஆன் மூலமாகவும் உலகத்திற்கு இறுதியாக வந்த இறுதித்தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூலமாக மனித குலத்துக்கு அல்லாஹ் வழிகாட்டி தந்திருக்கின்றான்.
எந்த அளவுக்கு என்றால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்கிறார்கள் எவர் நோன்பு நோற்றிருந்தும் பொய் சொல்வதையும் பொய்யான முறையில் செயல்படுவதையும் விட்டுவிடவில்லையோ அவன் பசித்திருப்பதையும் தாகித்திருப்பதையும் பற்றி அல்லாஹ்வுக்கு எந்த அக்கறையும் இல்லை !
பாருங்கள் மக்களே!
இப்படியான ஒரு அறிவிப்பு வந்த பிறகு நோன்பு இருக்கக்கூடிய எந்த ஒரு மனிதனாவது கவனக்குறைவாக செயல்படுவானா? பொறுப்பற்றவனாக இருப்பானா? அப்படி இருந்தால் அவனுடைய நன்மை அவனுடைய அனைத்து வகையான நற்காரியமும் பாழாகிவிடும் அல்லவா?
அப்படியானால்! ஒரு மாதம் முழுவதும் எப்படி தன்னை தூய்மையானவனாக மாற்றிக்கொள்ள பயிற்சி எடுத்துக் கொள்கின்றானோ அந்த பயிற்சியின் விளைவு நோன்பு அல்லாத மற்ற 11 மாதங்களில் அவன் தூய்மையற்ற மனிதனாக இருக்க மாட்டான்.
தூய்மையுள்ள மனிதனாக இருப்பதை இறைவன் விரும்பக்கூடிய மனிதனாக அவன் தன்னை உருவாக்கிக் கொள்வான், என்பதற்கான பயிற்சி தான் இந்த மாதம் ஆகவே இந்த மாதத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் தன்னுடைய உரையில் மிக அழகான முறையில் எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு ஓடைகுளம் முஸ்லிம் ஜமாத்தார்கள் ஆண்கள் பெண்கள் மாணவ மாணவிகள் இளைஞர்கள் இளைஞர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சி இறை அருளால் துஆ வுடன் நிறைவடைந்தது.
இடம்; ஓடைக்குளம்