News Channel

கோவையில் 15 லட்சம் மக்களுக்கு ஒழுக்கம் சார்ந்த விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய இருப்பதாக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணியினர் அறிவிப்பு.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், அகில இந்திய அளவில் முன்னெடுத்துள்ள ‘ஒழுக்கமே சுதந்திரம்’ பிரச்சார இயக்கத்தை முன்னிட்டு கோவையின் சார்பாக கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது.

இச்சந்திப்பில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை பெருநகர மகளிர் அணி செயலாளர் திருமதி. ஷர்மிளா அப்துல்லாஹ், கோவை தெற்கு மண்டல தலைவர் திருமதி. சலீனா பாரி, செயலாளர் திருமதி. பெனாசிர் சமது, கோவை வடக்கு மண்டல தலைவர் திருமதி. பாத்திமுத்து, கோவை மத்திய மண்டல தலைவர் திருமதி. கமருன்னிஷா ஆகியோர் உடனிருந்தனர்.

கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மகளிர் அணி தலைவர் திருமதி. ஜஹீனா அஹமது அவர்கள் ‘ஒழுக்கமே சுதந்திரம்’ பிரச்சார இயக்கம் நடைபெறுவது குறித்து விளக்கினார். 

நாட்டில் தற்போது பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் அத்துமீறல்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போதைக் கலாசாரம் பெருகி வருவது, ஆபாசம், தன் பாலினச் சேர்க்கை உள்ளிட்ட ஒழுக்கச் சீர்கேடுகள் பெருகி வருவது குறித்தும், அதனைக் களைந்திட பணி செய்ய வேண்டிய தேவைகள் குறித்தும் விளக்கினார்.

தொடர்ந்து கோவையில் பொதுக்கூட்டங்கள், அரங்கக்கூட்டங்கள், தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள், அனைத்து சமயத் தலைவர்கள் ஒன்றினையும் கருத்தரங்கங்கள், பேரணி, பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்வுகள், கண்காட்சிகள், தனி நபர் கவுன்சிலிங் வழங்குதல், உறுதி மொழி ஏற்பு நிகழ்வுகள் என பல்வேறு நிகழ்வுகள் மூலம் 15 லட்சம் மக்களுக்கு விழிப்புணர்வு செய்ய போவதாக அறிவித்தார்.

கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் வைத்து நடைபெற்ற இப்பத்திரிகையாளர் சந்திப்பில் செப்டம்பர் மாதம் முழுவதும் நடைபெற இருக்கின்ற ஒழுக்கமே_சுதந்திரம் பரப்புரையின் இலட்சினையை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை பெருநகர மகளிர் அணி தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் வெளியிட்டனர்.