06 ஆகஸ்ட் 2024
பத்திரிகைச் செய்தி
வங்கதேசத்தில் அமைதி மற்றும் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோரிக்கை
புது தில்லி: வங்கதேசத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) தலைவர் சையத் சஆததுல்லா ஹுசைனி கவலை தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் மீட்டெடுக்க உடனடியாக தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென தற்போதைய அவசர நிலையை கையாளும் பொறுப்புடைய அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஊடகங்களுக்கு அளித்த ஒரு அறிக்கையில், "வங்கதேசத்தில் நிலவும் நிலைமை குறித்தும், அப்பகுதியில் அதன் நீண்டகால விளைவுகள் குறித்தும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறது. ஷேக் ஹசீனா அரசின் சர்வாதிகார மற்றும் கடுமையான நிர்வாக அணுகுமுறையின் நேரடி விளைவுதான் தற்போது அங்கு நிலவும் அமைதியின்மை. 2024 ஜனவரியில் வங்கதேசத்தில் நடைபெற்ற தேர்தல்களில் முறைகேடுகள் நடந்ததாக பரவலான குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. இதனால் முழு எதிர்க்கட்சியும் தேர்தலை புறக்கணித்தது. இது ஜனநாயகத்தின் அஸ்திவாரத்தை பலவீனப்படுத்தும், அரசியல் அமைப்புமுறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை அழிக்கும். கூடுதலாக, பழிவாங்கும் அரசியலின் மூலம் கருத்து வேறுபாடு கொண்ட குரல்களை நசுக்க முந்தைய அரசின் முயற்சிகள் மிகவும் கவலை அளிப்பதாக இருந்தது, முன்னணி எதிர்க்கட்சித் தலைவர்கள் அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டனர், இது ஜனநாயக உரையாடலைத் தடுத்தது மற்றும் அரசியல் பதட்டங்களை அதிகரித்தது என சையத் சஆததுல்லா ஹுசைனி கூறினார்.
ஜமாஅத் தலைவர் மேலும் கூறியதாவது, "போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது ஷேக் ஹசீனா ஆட்சியின் எதிர்வினை மிகவும் வன்முறை மற்றும் அடக்குமுறைக்குரியது, இது போரில் பயன்படுத்தப்படும் நடவடிக்கைகளுக்கு ஒத்ததாகும். வங்கதேசத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க உடனடி மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்கவும், மக்களின் நம்பிக்கையை பெற்ற இடைக்கால அரசாங்கத்தை உடனடியாக அமைக்கவும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் வங்கதேச விவகாரங்களின் தலைமையில் உள்ள அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறது. இந்த காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்கப்பட வேண்டும், இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இடைக்கால அரசாங்கம் தாமதமின்றி ஜனநாயக செயல்முறையை ஆரம்பிக்க வேண்டும், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும், வங்கதேச மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கும் ஒரு உண்மையான பிரதிநிதித்துவ மற்றும் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை நிறுவ வேண்டும்.
இந்த அமைதியின்மையை பயன்படுத்தி குற்றவாளிகள் சொத்துக்களை அழித்து, அப்பாவி குடிமக்கள் மீது, குறிப்பாக சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீது கொடூரங்களைச் செய்கிறார்கள் என்பதை ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. இந்த வன்முறைச் செயல்களை நாம் திட்டவட்டமாகக் கண்டிக்கிறோம். சிறுபான்மையினர் மற்றும் பலவீனமான குழுக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்க நாங்கள் வலியுறுத்துகிறோம். சிறுபான்மை சமூகங்களுக்குச் சொந்தமான வழிபாட்டு இடங்கள் மற்றும் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் முன்வந்துள்ளனர் என்பதைக் குறிப்பிடுவது ஆறுதலளிக்கிறது.
வங்கதேசத்தின் உள்நாட்டு நிலைமை மற்ற பிராந்தியத்திற்கும் அண்டை நாடுகளுக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தலாக மாறுவதை தடுக்க உறுதியான நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். நாட்டில் அமைதி மற்றும் ஒழுங்கை மீட்டெடுப்பதற்கு முன்னுரிமை அளிக்குமாறு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொதுமக்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறோம். சமூக நல்லிணக்கத்தை பேணுவதற்கு சிறுபான்மையினர் மற்றும் பலவீனமான குழுக்களின் உயிர்களையும் சொத்துக்களையும் பாதுகாப்பது அவசியம். இந்த சவாலான காலங்களில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் வங்கதேச மக்களுடன் ஒற்றுமையுடன் நிற்கிறது, மேலும் நெருக்கடிக்கு விரைவான தீர்வு ஏற்படும் என்று நம்புகிறது. இது அனைவருக்கும் அமைதியான மற்றும் வளமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும்"
வெளீயிடு:
சல்மான் அகமது
தேசிய உதவி செயலாளர், ஊடகத் துறை.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், தலைமையகம்