நீதி, இணக்கம், பாதுகாப்புப் பெறும் நாளாக இந்தப் பெருநாள் அமையட்டும்
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
மாநிலத் தலைவர் பெருநாள் செய்தி
ரமளான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று,
திருமறை ஓதலும்,
ஈதலுமாக இறையச்சப் பயிற்சி பெற்று பெருநாள் கொண்டாடும் அனைவருக்கும் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகள்.
ரமளான் திருமறைக் குர்ஆன் இறங்கிய மாதம்.
திருக்குர்ஆன் உலக மக்களுக்கு அருளாக அனுப்பப்பட்ட வேதம்.
திருக்குர்ஆன் நீதியைப் போதிக்கிறது. நீதியான சமுதாயத்தில் தான் இணக்கம் பிறக்கும்.
அமைதி நிலவும்.
அமைதி உலவும் இடத்தில்தான் பாதுகாப்பு இருக்கும்.
திருக்குர்ஆன் நீதிமிக்க சமுதாயத்தை உருவாக்க விரும்புகிறது. வாய்மைக்காகவும் நீதிக்காகவும் போராடுபவர்களுக்கே இறை உதவியும் வெற்றியும் கிடைக்கிறது.
நீதி மறுக்கப்படும் இடங்களில் அநீதி கோலோச்சுகிறது.
அமைதி சீர்குலைகிறது.
பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. இணக்கம் சிதைகிறது.
நீதியின் பக்கம் நிற்பது உலக அமைதிக்கும் இணக்கத்திற்கும் வழிவகுக்கும்.
உலகெங்கும் பெருநாள் கொண்டாடி மகிழும் வேளையில் மத்திய கிழக்கு பெரும் போரைச் சந்தித்து வருவது வேதனையளிக்கிறது.
அநீதியும், அராஜகமும் ஒழிந்து நீதியும் அமைதியும் நிலைநாட்டப்பட நாம் பிரார்த்திப்போம்.
ரமளான் தந்த பயிற்சிகளை நடைமுறைப் படுத்துவோம்.
குர்ஆனிய சமுதாயமாக மாறுவோம். நீதிக்காக நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம்.
இந்த இனிய நாளில் அமைதியும், இன்பமும் நம் அனைவரையும் சூழட்டும்.
எல்லாருக்கும் பேரன்பின் ஈகை வாழ்த்துகள்.
"ஈத் முபாரக்"
மெளலவி A.முஹம்மது ஹனீஃபா மன்பயீ
மாநிலத் தலைவர்
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
தமிழ்நாடு &புதுச்சேரி