News Channel

ஈதுல் பித்ர் வாழ்த்துக்கள்

ஈகை திருநாள் வாழ்த்துக்கள்.

"பத்திரிகைச் செய்தி"

"20 மார்ச் 2026"

நீதி, ஒருமைப்பாடு மற்றும் அமைதிக்கான திருக் குர்ஆனின் செய்தியை வலியுறுத்தி, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்திய தலைவர் 
தலைவர் சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி 
ஈகைத் திருநாள் வாழ்த்து.

புது தில்லி: 
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) தலைவர் சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி, 
முஸ்லிம்கள் அனைவருக்கும் மற்றும் நம் நாட்டில் வாழும் அனைத்துச் சகோதர சகோதரிகளுக்கும் தனது இதயப்பூர்வமான ஈகைத் திருநாள் (ஈதுல்-பித்ர்) வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையில் ஜமாஅத் தலைவர் கூறியதாவது:

"ஈகைத் திருநாள் என்பது திருக்குர்ஆனின் கொண்டாட்டமாகும்.
 இது திருக்குர்ஆன் அருளப்பட்டதைக் கொண்டாடும் நிகழ்வு
அதனுடனான நமது பிணைப்பை உறுதிப்படுத்தி, அதன் போதனைகளின்படி செயல்படுவதற்கான முயற்சியாகும். 

அல்லாஹ் நமக்கு வழங்கிய நேர்வழிகாட்டி எனும் அருட்கொடைக்காக நன்றியையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் தருணம் இது. திருக்குர்ஆன் எனும் மாபெரும் அருட்கொடையைக் கொண்டாடுமாறு அல்லாஹ்வே கட்டளையிட்டுள்ளான்.

'மனிதர்களே! 
உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு ஓர் அறிவுரையும், உங்கள் உள்ளங்களில் உள்ள நோய்களுக்கு மருந்தும், 
நம்பிக்கை கொண்டோருக்கு நேர்வழியும், அருளும் வந்துவிட்டது. (நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ்வின் அருட்கொடையினாலும், அவனது கருணையினாலுமே (இவை கிடைத்துள்ளன). எனவே, 
இதில் அவர்கள் மகிழ்ச்சியடையட்டும். அவர்கள் சேர்த்து வைக்கும் செல்வங்களை விட இது மிகச் சிறந்தது.' (குர்ஆன் 10: 57, 58)"

புனித ரமலான் மாதத்தில் எல்லாம் வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனை அருளினான் என்றும், 
குர்ஆனின் போதனைகளின்படி செயல்படுவதற்கான ஒரு சிறப்புப் பயிற்சிக் காலமாக இந்த மாதத்தை அவன் நிர்ணயித்துள்ளான். 

முஸ்லிம்கள் இம்மாதத்தில் குர்ஆனை அதிகமாக ஓதுகின்றனர். 
இரவுத் தொழுகைகளில் நீண்ட நேரம் நின்று முழு குர்ஆனையும் செவிமடுக்கின்றனர். 
நோன்பின் மூலம் அவர்கள் இறையச்சம், மன உறுதி மற்றும் சுயக்கட்டுப்பாட்டை வளர்த்துக் கொள்கிறார்கள். 

குர்ஆனின் போதனைகளை நடைமுறைப்படுத்த இவை மிக அவசியமானவை. இந்த ஒரு மாத கால தனித்துவமான பயிற்சியை நிறைவு செய்ததைக் கொண்டாடுவதும், அதன் நன்மைகளை நடைமுறை வாழ்வில் கடைப்பிடிப்போம் என்று உறுதி ஏற்பதுமே ஈகைத் திருநாளாகும்.

"பெருநாளைக் கொண்டாடும் வேளையில், ஈத் மற்றும் ரமலான் மாதத்தின் இந்தத் தத்துவத்தை மனதில் கொள்வது அவசியமாகும். 
ரமலான் நம்மை மூன்று பரிமாணங்களில் பயிற்றுவிக்கிறது. 
ஒருபுறம், நாம் பசி மற்றும் தாகத்தின் சிரமங்களை அல்லாஹ்வின் திருப்திக்காக ஏற்று, அவனது கட்டளைகளுக்குப் பணிந்து நடக்கும் மனப்பக்குவத்தை வளர்க்கிறோம். மறுபுறம், நமது உணர்ச்சிகளையும் ஆசைகளையும் கட்டுப்படுத்தும் சுயக்கட்டுப்பாட்டுத் திறனை மேம்படுத்துகிறோம். 

மேலும், ரமலான் மாதத்தில் நாம் செய்யும் தான தருமங்கள் மூலம், பிற மனிதர்கள் மீதான நமது பொறுப்புகளை உணர்கிறோம். 
பெருநாள் தினத்தில் கூட, 'ஸதக்கத்துல் ஃபித்ர்' தர்மம் வழங்குவதன் மூலம் சமூகத்தில் எவரும் பெருநாள் மகிழ்ச்சியிலிருந்து விடுபடாமல் இருப்பதை நாம் உறுதி செய்கிறோம்."

"இஸ்லாமிய உலகம் கடும் சோதனைகளையும் நிச்சயமற்ற தன்மையையும் சந்தித்து வரும் சூழலில், உலகம் ஒரு பேரழிவுகரமான போரை எதிர்கொண்டுள்ள நிலையில் நாம் இந்த பெருநாளைக் கொண்டாடுகிறோம். 

அடக்குமுறை, கொடுங்கோன்மை மற்றும் காலனித்துவத்திற்கு எதிராக உறுதியுடன் நிற்பவர்களுக்கும், பலவீனமான மற்றும் ஒடுக்கப்பட்ட நாடுகளுக்காகக் காலனித்துவ சக்திகளை எதிர்த்துப் போராடுபவர்களை நாங்கள் மதிக்கின்றோம் 
அவர்களின் வெற்றிக்காகப் பிரார்த்திக்கிறோம். 
ஒட்டுமொத்த முஸ்லிம் உம்மத்தின் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்காக நாங்கள் பிரார்த்திக்கிறோம். 
இந்தப் பதற்றங்கள் விரைவில் முடிவுக்கு வந்து, இப்பகுதியில் நீடித்த அமைதி மற்றும் பாதுகாப்பின் புதிய சகாப்தம் தொடங்கும் என்று நம்புகிறோம்.

நமது நாட்டின் முன்னேற்றம், செழிப்பு மற்றும் அமைதிக்காக நாங்கள் பிரார்த்திக்கிறோம். 
பல்வேறு மதங்களைச் சார்ந்த சகோதர சகோதரிகளுக்கும் எங்களது ஈத் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
 
நம் நாட்டில் அமைதி, நீதி மற்றும் நேர்மையான சூழலை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைவோம்
நாட்டின் உண்மையான பிரச்சினைகளைத் தீர்க்கக் கூட்டு முயற்சியை மேற்கொள்வோம் என வேண்டுகோள் விடுக்கிறேன்," என்று கூறினார்.

வெளியீடு:
சல்மான் அஹ்மத்
தேசியச் செயலாளர், ஊடகப் பிரிவு,
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்,
புது தில்லி.