ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் உதயமானது..!


'நள்ளிரவு நேரத்தில், உலகமே உறங்கிகொண்டிருக்கிற வேளையில் இந்தியா விழிப்புடன் இருந்து உயிர்ப்பையும் விடுதலையையும் பெறுகிறது...!' 1947இல் விடுதலை நாளில் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் இந்த நள்ளிரவு முழக்கத்துடன் தான் நம்முடைய நாடு தன்னுடைய பயணத்தைத் தொடங்கியது.

அவை உண்மையிலேயே குதூகலம் நிறைந்த தருணங்கள். 200 ஆண்டுக்கால பிரிட்டிஷ் அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெறுகின்ற தித்திப்பான நாள்கள் தாம் அவை.

'அரசியல் விடுதலையுடன் சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவம், சமூக நீதி, நியாயம் ஆகிய வலுவான மாண்புகளின்மீது தேசத்தைக் கட்டமைத்து, அமைதி, முன்னேற்றம், ஈடேற்றம் ஆகியவற்றுக்கான பாதையில் தேசத்தை வழிநடத்திச் செல்வதுதான் இன்றியமையாதது. அரசியல் விடுதலையை மட்டுமே வைத்துக் கொண்டு அந்த மாண்புகளின் அடிப்படையில் தேசத்தைக் கட்டமைக்க முடியாது' என அவர்கள் ஓங்கி முழங்கினார்கள்.

அவர்கள் எண்ணிக்கையில் குறைவானவர்களாகத்தாம் இருந்தார்கள். ஆனால் உறுதியும் தீரமும் நிறைந்தவர்களாய் மிளிர்ந்தார்கள். மேலும் காலச் சக்கரத்தின் ஓயாத சுழற்சியில் மக்களாட்சியைத் தாங்கி நிற்கின்ற தூண்கள் செல்லரித்துப் போய் விடாமல் நிற்பதற்குஇறைவன் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையும், நம்முடைய செயல்கள் அனைத்துக்கும் மறுமையில் இறைவனிடம் கணக்கு காட்ட வேண்டியிருக்கும் என்கிற பதில் சொல்கின்ற பொறுப்பு உணர்வும் தேவை என்பதில் உறுதியாக இருந்தார்கள்.

ஓயாத போர்களும் தீராத சண்டைகளுமாய் சீர்கெட்டுக் கிடக்கின்ற இந்த உலகத்தில் நீதிக்கும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், இறைப்பற்று ஆகிய மாண்புகளுக்கும் இறைவனை மையமாகக் கொண்ட வாழ்வுக்கும் ஒளிமயமான எடுத்துக்காட்டாக ஜொலிக்கின்ற நாடாக தம்முடைய நாட்டை ஆக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் விருப்பமாக, ஆசையாக, ஏக்கமாக இருந்தது. இந்த இலட்சியவாதிகள் 1948 ஏப்ரல் மாதத்தில் கங்கை நதிக்கரையில் அலஹாபாத் மாநகரத்தில் ஒன்றுதிரண்டு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் என்கிற பெயரில் இலட்சிய ஜமாஅத் ஒன்றை நிறுவினார்கள். 1948 ஆவது ஆண்டில் சொற்பமான எண்ணிக்கையினருடன் தன்னுடைய இலட்சியப் பயணத்தைத் தொடங்கிய இந்த ஜமாஅத் இன்று திரும்பும் திசையெங்கும் கிளை பரப்பி நம்முடைய நாட்டின் மூலைமுடுக்கெங்கும் தன்னுடைய ஆளுமைகளைக் கொண்டிருக்கின்ற பேரியக்கமாக செழிப்பாக நிற்கின்றது. ஆன்மிக வளம், மக்கள் சேவை, விழுமம் சார்ந்த அரசியல், பல்சமய கலந்துரையாடல், ஒழுக்க வரம்புகளை மீறாத இதழியல், நியாய உணர்வு நிறைந்த பொருளியல், சமத்துவமும் சகோதரத்துவ வாஞ்சையும் தழைக்கின்ற சமூகவியல், கல்வி, ஆராய்ச்சி என்று மக்கள் நலனையும் தேச நலனையும் ஒற்றை நோக்கமாகக் கொண்ட ஏராளமான துறைகளில் முத்திரை பதித்து வருகின்றது.

குறிக்கோள்


ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் குறிக்கோள்தீனை நிலைநாட்டுவதாகும். அதாவது வாழ்வின் எல்லாத் துறைகளிலும் மார்க்கத்தைப் பின்பற்றுவதும் மார்க்கத்தின் அடிப்படையில் மகத்தான மறுமலர்ச்சியை ஏற்படுத்தி அதனை நிலைநாட்டுவதுமாகும். குர்ஆனிலிருந்தே இது பெறப்பட்டுள்ளது.

நம்பிக்கைகள்

இறைவனுக்கு மட்டுமே அடிபணிந்தும் கீழ்ப்படிந்தும் வாழ்தல், இறைத் தூதர் (ஸல்) அவர்களைப் பின்பற்றி நடத்தல், மறுமையை முன்னிறுத்தி செயல்படுதல் ஆகிய மூன்றுதாம் வாழ்வுக்கு அர்த்தம் தருகின்ற, அதனை அழகூட்டுகின்ற, அதனை நெறிப்படுத்துகின்ற அடிப்படையான, இன்றியமையாத கோட்பாடுகளாக இருக்கின்றன. ஜமாஅத் கடைப்பிடிக்கின்ற மாண்புகள், நடைமுறைகள் ஆகிய அனைத்தும் இந்தக் கோட்பாடுகளிலிருந்தே பெறப்படுகின்றன.

வழிகாட்டுதல்

வழிகாட்டுதலுக்கான அடிப்படைகளாய், மூல ஊற்றுகளாய் இருப்பவை குர்ஆனும் அன்பு நபிகளாரின் அமுத வாக்குகளும் அழகிய நடைமுறைகளும் தாம்.

வழிகாட்டும் நியதிகள்

கருத்துச் சுதந்திரம், பரஸ்பரம் ஆலோசித்து செயல்படுதல், இறைவனுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு உணர்வு ஆகிய மூன்றுதாம் ஜமாஅத்தின் அனைத்துச் செயல்பாடு களையும் நெறிப்படுத்தும் நியதிகளாய் இருக்கின்றன.

தொலைநோக்கு

இறையச்சம், அமைதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவ வாஞ்சை, நீதி, இணக்கம் ஆகியவற்றை அடிப்படைகளாகக் கொண்ட சமூகத்தைக் கட்டமைப்பதுதான் ஜமாஅத்தின் தொலைநோக்குத் திட்டமாகும். அச்சம் இல்லாத தேசத்தை, அநீதி இல்லாத வீதியை, அக்கிரமம் நடக்காத இல்லத்தை, ஊழல் இல்லாத வணிகத்தை, கள்ளம் இல்லாத ஊடகத்தை, குற்றம் இல்லாத தேசத்தை உருவாக்குவதற்கே ஜமாஅத் பாடுபடுகின்றது.

இலட்சியப் பணி

சமூகத்திலும் நாட்டிலும் நன்மைகளை ஏவிவிடவும் தீமைகளைத் தடுக்கவும் தான் ஜமாஅத் தொடர்ந்து பாடுபட்டு வருகின்றது. வாழ்வின் எல்லாத் துறைகளிலும் நீதியையும் நியாயத்தையும் நிலைநிறுத்தவே ஜமாஅத் விரும்புகின்றது. இறையச்சம், பொறுமை, இறைப்பற்று நிறைந்த வாழ்வு, மென்மை, நிதானம், நேர்மை, வாய்மை, ஒழுக்கத் தூய்மை, பாசம், நேசம், வீரம், தீரம், துணிவு, கனிவு, பணிவு, சகிப்புத் தன்மை, மன்னிக்கும் மாண்பு, நன்றியுணர்வு போன்ற சிறப்பான பண்புகளைக் கொண்ட அழகான ஆளுமைகளாய் நம்முடைய நாட்டின் ஆண்களையும் பெண்களையும் வார்த்தெடுக்கவே ஜமாஅத் பெரிதும் விரும்புகின்றது.

வழிமுறை


ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தன்னுடைய குறிக்கோளை அடைவதற்காக அமைதியான, ஆக்கப்பூர்வமான, சட்டப்பூர்வமான வழிகளையே மேற்கொள்கின்றது. இஸ்லாமிய போதனைகளைக் கொண்டு மனிதர்களின் சிந்தனை, செயல், உணர்வு ஆகிய மூன்றையும் நெறிப்படுத்தி இஸ்லாமிய சித்தாந்தத்துக்கு இயைந்து போகின்ற வகையில் மக்கள் கருத்தை வார்த்தெடுத்து சமூகத்திலும் நாட்டிலும் தான் விரும்புகின்ற மாற்றங்களைக் கொண்டு வரவே ஜமாஅத் விரும்புகின்றது

ஜமாஅத் ஒழுக்க மாண்புகளுக்கும் தார்மிக வரம்புகளுக்கும் உட்பட்டே தன்னுடைய எல்லா பணிகளையும் சேவைகளையும் மேற்கொள்கின்றது. சமூக பதற்றத்தை, தேவையற்ற கொந்தளிப்பை, வர்க்கப் போராட்டத்தை, குழப்பத்தை கலவரத்தை தோற்றுவிக்கக்கூடிய செயல்உத்திகளை ஜமாஅத் முற்றாக தவிர்த்தே வந்திருக்கின்றது.

முக்கிய சாதனைகள்


தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராட்டி, இந்தி, உர்தூ, ஆங்கிலம், பஞ்சாபி, ஒரியா, வங்காளம் உட்பட நம்முடைய நாட்டின் தேசிய மொழிகள் அனைத்திலும் திருக்குர்ஆனை மொழிபெயர்க்கின்ற மகத்தான சாதனையை ஜமாஅத் செய்து முடித்திருக்கின்றது.

இஸ்லாத்தின் போதனைகளை எடுத்துரைக்கின்ற, இஸ்லாம் குறித்தும் முஸ்லிம்களைப் பற்றியும் நிலவுகின்ற தவறான கருத்துக்களைக் களைகின்ற, உள்ளங்களையும் இதயங்களையும் புரட்டிப் போடுகின்ற, அழகும் அர்த்தமும் மிளிர்கின்ற நூல்களை ஜமாஅத் வெளியிட்டிருக்கின்றது.

இந்திய முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்கு பாதை அமைத்து தேசத்தையும் சமுதாயத்தையும் மறுகட்டமைப்புச் செய்கின்ற அறப் பணியில் அவர்களை ஒன்றுதிரட்டி வருகின்றது.

குர்ஆனின் அடிப்படையிலும் நபிவழியின் ஒளியிலும் மனிதர்களின் வாழ்விலும் நடப்பிலும் மகத்தான மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது.

நாம் மேற்கொண்டுள்ள பணிகள் அனைத்துக்கும் உண்மையான உந்துசக்தியாக, ஊக்கமும் உத்வேகமும் அளிக்கின்ற மிகப் பெரும் நோக்கமாக இருந்து வருவது மறுமையில் வெற்றி கிடைக்க வேண்டுமே என்கிற தவிப்பும், இறைவனின் உவப்பு வாய்க்க வேண்டுமே என்கிற ஆசையும்தாம்.


தீனை நிலைநாட்டுங்கள்; அதில் பிரிந்துவிடாதீர்கள்! (அத்தியாயம் 42 அஷ்ஷூரா 13)

கலங்கரை விளக்கம்


இஸ்லாமிய போதனைகளையும் மாண்புகளையும் பரப்புகின்ற, இஸ்லாமிய எழுச்சியைத் தோற்றுவிக்கின்ற ஆற்றல்வாய்ந்த நூல்களை நம்முடைய நாட்டின் பதினேழு தேசிய மொழிகளில் வெளியிடுவதில் முன்னோடியாக, புதிய போக்குகளை அறிமுகப்படுத்துகின்ற ஆற்றல்மிகு சக்தியாக, பாதை காட்டுகின்ற கலங்கரை விளக்கமாக ஜமாஅத் மிளிர்கின்றது.

நம்முடைய நாட்டில் மிகப் பெரும் எண்ணிக்கையில் பேசப்படுகின்ற முக்கியமான மொழிகள் அனைத்திலும் திருக்குர்ஆனை மொழிபெயர்த்த தனிச் சிறப்பும் ஜமாஅத்துக்கு உண்டு.

குர்ஆனை மொழிபெயர்த்ததோடு நபிமொழிகள், நபிகளாரின் வரலாறு, இஸ்லாமிய வரலாறு, நேர மேலாண்மை, மனித உரிமைகள், சட்டம், அரசியல், சுயசரிதை, குழந்தை இலக்கியம், சிறார் இலக்கியம், மகளிர் மேம்பாடு, ஆன்மிகம் என பலதரப்பட்ட தலைப்புகளிலும் ஆயிரக்கணக்கான நூல்களை வெளியிட்டு முத்திரை பதித்திருக்கின்றது.

ஒழுக்க மாண்புகளின் அடிப்படையில் சமூகம்

ஜமாஅத்தின் பணிகளை ஒரே வரியில் சொல்ல வேண்டுமெனில் விழுமம் சார்ந்த சமூகத்தை கட்டமைக்கின்ற போராட்டத்தில் முழுமூச்சாக இறங்கி இருக்கின்ற ஜமாஅத் என்று ஆணித்தரமாகச் சொல்ல முடியும். நீதி, சமத்துவம், சுதந்திரம், அமைதி, இணக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் தேசிய வாழ்வை கட்டமைப்பதுதான் ஜமாஅத்தின் முதன்மைப் பணியாக இருந்து வந்துள்ளது.

சமூக நீதியை வாழ்வின் எல்லாத் துறைகளிலும் நிலைநிறுத்துவதை உயிர்மூச்சாக கொண்டு அது இயங்கி வருகின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனின் வழிகாட்டுதலைப் பின்பற்றி நடப்பதில் உண்மையான வெற்றி இருக்கின்றது என்பதை உரத்துச் சொல்லி வருகின்றது.

மகளிர் மேம்பாடு

இஸ்லாமிய எழுச்சிக்கான இந்த மகத்தான அறப்பணிகளில் பெண்களின் மும்முரமான, சுறுசுறுப்பான பங்கேற்பையும் பங்களிப்பையும் உறுதி செய்வதில் ஜமாஅத் தொடக்கத்திலிருந்தே கண்ணும் கருத்துமாக இருந்து வந்துள்ளது. புத்துலகு சமைப்பதில் பெண்களின் பங்கை இஸ்லாம் அதிகமாக அறிவுறுத்துவதால் இஸ்லாமிய வரலாறு முழுவதிலும் பெண்களின் பங்கேற்பும் பங்களிப்பும் அனைத்தையும் தழுவியதாய், பிரமாதமானதாய், மனஎழுச்சியை ஏற்படுத்தக்கூடியதாய் இருந்து வந்துள்ளது. இன்றும் நம்முடைய நாடு முழுவதிலும் ஆயிரக்கணக்கான பெண்கள் சமூக ஆர்வலர்களாய், மக்கள் சேவகர்களாய், திசைகாட்டும் கலங்கரை விளக்கங்களாய் மௌனமாக, அழுத்தமாக, சிறப்பாக ஓயாமல் ஒழியாமல் உழைத்து வருகின்றார்கள். சமூக மேம்பாட்டுக்காகவும் தேச நலன்களுக்காகவும் சத்தம் போடாமல் மகத்தான அளவில் சேவையாற்றி வருகின்றார்கள்.

ஜமாஅத்தின் கொள்கைகளையும் செயல்முறைகளையும் தீர்மானிக்கின்ற ஆற்றல் வாய்ந்த ஆட்சிமன்றக் குழுவாக இருக்கின்ற அகில இந்திய பிரதிநிதிகள் சபையில் முப்பத்து மூன்று சதவீதத்தை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ள ஒரே முஸ்லிம் அமைப்பு என்கிற சிறப்பும் ஜமாஅத்துக்கு உண்டு. ஜமாஅத்தின் இந்த ஏற்பாடு பெண்கள் மத்தியில் ஆற்றல் வாய்ந்த ஆளுமைகளை உருவாக்குவதற்கு உதவி இருக்கின்றது. இப்போது ஜமாஅத்தின் முதன்மை ஆட்சிமன்றக் குழுவாக இருக்கின்ற மத்திய ஆலோசனைக் குழுவில் இரண்டு சகோதரிகள் தேர்வாகி இருப்பதே இதற்குச் சான்று.


நீங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வின் கயிற்றை இறுகப் பிடித்துக்கொள்ளுங்கள்; பிரிந்துவிடாதீர்கள். (அத்தியாயம் 3 ஆலுஇம்ரான் 103)

  • நாட்டு நலனில் ஜமாஅத்
  • பயிற்சியும் மனிதவள மேம்பாடும்
  • சமுதாய முன்னேற்றம்
  • சகோதரத்துவ வாஞ்சையும் மத நல்லிணக்கமும்
  • கல்வி
  • ஊடகம்
  • பொருளாதாரம்
  • இளைஞர் அமைப்பு
  • மக்கள் சேவை
  • நாட்டு நலனில் ஜமாஅத்


    நம்முடைய நாட்டை இன்று அலைக்கழித்து வருகின்ற ஊழல், மதவாத, மதவெறியை அடிப்படையாகக் கொண்ட வெறுப்பு அரசியல், வணிகமயமான கல்வி போன்றவற்றைக் குறித்து ஜமாஅத் மிகவும் கவலை கொண்டிருக்கின்றது. இறையச்சத்தின் அடிப்படையில் வலுவாகக் கட்டமைக்கப்பட்ட விழுமம் சார்ந்த அரசியலையும், அரசுப் பணிகளில் வெளிப்படைத் தன்மையையும், இறைவனுக்கு முன்னால் பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு உணர்வுடன் கூடிய நல்லாட்சியையும் ஜமாஅத் அதிகமாக வலியுறுத்தி வந்துள்ளது.

    நம்முடைய நாட்டில் மக்களாட்சி மாண்புகளையும் அரசியல் அமைப்புச் சட்டம் அறிவுறுத்துகின்ற விழுமங்களையும் செழித்தோங்கச் செய்வதற்காக ஜமாஅத் தொடர்ந்து தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளது. இது தொடர்பாக ஜனநாயகம் மற்றும் சமூக நல்லிணக்கப் பேரவை Forum for Democracy and Communal Amity - FDCA) போன்ற மன்றங்களையும் Movement for Peace and Justice (MP)) போன்ற மனித உரிமைக்கு குரல் கொடுக்கின்ற அமைப்புகளையும் ஆதரித்து வந்துள்ளது. அரசு வன்முறைக்கும் கொடுமைக்கும் ஆளாகி தவித்து நிற்கின்ற அப்பாவியான குடிமக்களுக்கு சட்ட ரீதியான உதவியை அளிப்பதிலும் ஜமாஅத் மும்முரமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது.

  • பயிற்சியும் மனிதவள மேம்பாடும்


    ஜமாஅத் தன்னுடைய உறுப்பினர்கள், ஊழியர்கள், அபிமானிகள் போன்றோரின் ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சியிலும், உளத்தூய்மையை மேம்படுத்துவதிலும், பயிற்சியிலும், திறன் வளர்ப்பிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றது. வாழ்நாள் முழுவதும் கற்றலைத் தொடர்வதில் பேரார்வத்தை ஏற்படுத்தி வருகின்றது.

  • சமுதாய முன்னேற்றம்


    வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் குறிப்பாக கல்வி, பொருளாதாரம், மருத்துவம் ஆகிய களங்களிலும் முஸ்லிம்களின் முன்னேற்றத்தை உறுதி செய்வதற்காக ஜமாஅத் திட்டம் வகுத்துச் செயலாற்றி வருகின்றது. அதிலும் குறிப்பாக கல்வியில் பின்னடைவு, வேலை வாய்ப்பின்மை, சமூக அவலங்கள், சமுதாயத்தில் ஊடுருவிவிட்டுள்ள இஸ்லாத்துக்கு மாற்றமான நடைமுறைகள் போன்றவற்றைக் களைவதில் ஜமாஅத் வீர்யத்துடன் செயலாற்றி வருகின்றது.

    விஷன் 2026

    இந்தத் தொடரில் சமுதாய முன்னேற்றத்துக்கான ஒருங்கிணைந்த, நீண்டக் கால இலக்குடன் கூடிய பன்முக தொலைநோக்குத் திட்டம் ஒன்றை விஷன்2016 என்கிற பெயரில் ஜமாஅத் தலைவர்களும் நாட்டின் இதர முதன்மையான குடிமக்களும் ஒன்று சேர்ந்து 2006இல் வகுத்தனர். சமுதாயத்தை வலுப்படுத்துகிற நோக்கத்துடன் கூடிய இந்த பன்முக தொலைநோக்குத் திட்டம் இப்போது விஷன் 2026 என்கிற பெயரில் நீட்டிக்கப்பட்டிருக்கின்றது.

  • சகோதரத்துவ வாஞ்சையும் மத நல்லிணக்கமும்


    நம்முடைய நாட்டின் பன்மைச் சமூகச் சூழலில் வெவ்வேறு தரப்பினருக்கிடையில் இணக்கமும் இனிமையும் புரிதலும் சகோதர வாஞ்சையும் நிறைந்த உறவும் தொடர்பும் நிலை பெற்றிருப்பது இன்றியமையாததாகும். ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் இந்தக் களத்தில் தொய்வில்லாமல் இடைவிடாமல் செயலாற்றி வருகின்றது. பல்வேறு மதத் தலைவர்களுக்கு இடையில் உரையாடலையும் கருத்துப் பரிமாற்றத்தையும் மேற்கொள்வதை ஜமாஅத் தன்னுடைய பணிகளின் முக்கியமான கூறாக வைத்து இருக்கின்றது.

    இந்த வகையில் ஈத்மிலன் - பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சிகளையும் நோன்பு துறப்பு - இஃப்தார் விருந்து நிகழ்வுகளையும் தொடர்ந்து நடத்தி அவற்றை சமூக நல்லிணக்கத்துக்கான உயிர்த்துடிப்பான உத்தியாக ஆக்கியிருக்கின்றது.

    இந்த வகையில் நம்முடைய நாட்டின் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த மூத்த ஆன்மீகப் பெருந்தகைகள், ஆச்சார்யாக்கள், சீக்கிய குருமார்கள், கிறித்தவ அருட்சகோதரர்கள் என ஆன்மீகத் தலைவர்கள் அனைவரையும் ஒன்றுசேர்த்து ஜமாஅத் தலைவர்கள் தார்மிக் ஜன் மோர்ச்சா - ஆன்மிக மக்கள் மன்றம் ஒன்றையும் அமைத்திருக்கின்றார்கள்.

  • கல்வி


    சமுதாய முன்னேற்றத்துக்கும் நாட்டு வளர்ச்சிக்கும் மகத்தான பங்களிக்கின்ற ஆளுமைகளாய் மாணவ, மாணவிகளை ஆயத்தப்படுத்துகின்ற வகையில் கல்வி, ஒழுக்கம், வல்லமை ஆகிய மூன்று இலக்குகளையும் ஒருசேர வென்றெடுக்கும் வகையில் தனிச் சிறப்புமிக்க கல்வி நிறுவனங்களை நிறுவி நடத்துமாறு ஜமாஅத் விடுத்த அழைப்பைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஜமாஅத்தைச் சார்ந்தவர்கள் சங்கிலித் தொடராய் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், ஆய்வு நிறுவனங்கள், மதரஸாக்கள், தொழில்நுட்ப பயிற்சி நிலையங்கள், ஆராய்ச்சி நிலையங்கள் போன்றவற்றை நாடு முழுவதும் நிறுவினார்கள். இந்த நோக்கத்திற்காக ஜமாஅத் அமைத்த மத்திய கல்வி வாரியம் (Markazi Taleemi Board -MTB) சமுதாயத்தின் கல்வித் தேவைகளை நிறைவேற்றுகின்ற விஷயத்தில் தொடர் கவனம் செலுத்தி வருகின்றது. ஜமாஅத் நிர்வகித்து நடத்தி வருகின்ற பள்ளிகள், கல்லூரிகள், பிற நிறுவனங்கள் செம்மையாக மேலாண்மை செய்யப்படுவதையும் ஜமாஅத்தின் கல்வி நிறுவனங்கள் மூலமாக உச்சபட்ச கல்வி தேர்ச்சியும் வல்லமையும் கிடைப்பதை சாத்தியமாக்குகின்ற வகையிலும் இந்த வாரியம் முனைப்புடன் செயலாற்றி வருகின்றது.

  • ஊடகம்


    ஜமாஅத்தின் மகத்தான பணிகளுக்கு மகுடம் சேர்ப்பதாய் இருப்பது சமரசம் மாதமிருமுறை இதழ்தான் என்று உறுதியாகச் சொல்லலாம். தமிழ்நாட்டு முஸ்லிம் பத்திரிகை உலகில் புதிய போக்குகளை புகுத்துவதிலும் புதிய பரிமாணங்களை ஏற்படுத்துவதிலும் சமரசம் சமரசமின்றி இயங்கி வருவதே மிகப் பெரும் சாதனையாகும்.

    முஸ்லிம் பத்திரிகைகளின் எழுத்து நடையையே மாற்றி அமைத்து அரபு, ஆங்கில கலப்பில்லாத செந்தமிழில் ஆக்கங்களை வெளியிட்டு புதிய வரலாறு படைத்த முன்னோடி இதழ்தான் சமரசம். இன்று சமரசத்தைப் பிரதி எடுத்ததைப் போன்று சமரச பாணியில் ஒன்றுக்கு மேற்பட்ட இதழ்கள் வெளியாகி வெற்றி பெற்றிருப்பதை சமரசத்தின் சாதனை என்றே சொல்லலாம்.

    இதனால்தான் மூத்த தமிழ் அறிஞர் ஒருவர் தமிழ்நாட்டு முஸ்லிம் இதழியல் வரலாற்றை ‘சமரசத்துக்கு முன் - சமரசத்துக்கு பின்' என இரண்டாகப் பகுக்கலாம் என்று வாய்விட்டுச் சொன்னது கவனிக்கத்தக்கது.

    சமரசம் மட்டுமின்றி உதய தாரகை, உயிரோட்டம் ஆகிய இதழ்களையும் ஜமாஅத் வெளியிட்டு வருகின்றது. முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் முன்னோடி பெண்கள் இதழ்தான் உதயதாரகை. சிந்தனைக்குத் தீனி போடுகின்ற, அதே சமயம் செயல்படவும் தூண்டிவிடுகின்ற, மனத்துக்குள் வெளிச்சத்தைப் பாய்ச்சுகின்ற, புத்துணர்வு ஊட்டுகின்ற ஆக்கங்களின் தாகமும் தேடலும் இன்றைய இலட்சிய இஸ்லாமிய மங்கையரிடம் அதிகமாகிக் கொண்டிருக்கின்ற இன்றையக் காலகட்டத்தில் அவர்களின் அந்தத் தேவையை நிறைவேற்றுகிற விடையாய் ஓங்கி ஜொலிக்கின்றது உதயதாரகை.

    ஜமாஅத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், ஊழியர்கள் ஆகியோரின் சிந்தனைக்கு விருந்தாகவும் சித்தாந்த ரீதியாக அவர்களை ஒருமுகப்படுத்துகின்ற நோக்கோடும் *உயிரோட்டம்* என்கிற பெயரில் காலாண்டிதழ் ஒன்றையும் ஜமாஅத் வெளியிட்டு வருகின்றது.

  • பொருளாதாரம்


    வட்டி எனும் கொடுமையிலிருந்து மக்களை விடுவிப்பதற்கும் வட்டி இல்லா நிதி நிறுவனங்களை அமைப்பதற்காகவும் ஜமாஅத் தொடர்ந்து பாடுபட்டு வருகின்றது.

    இந்த வகையில் இஸ்லாமிய பொருளாதாரம், இஸ்லாமிய நிதியம் ஆகிய களங்களில் மிக உயர்வான நிபுணத்துவத்தை வளர்க்கின்ற நோக்கோடு கல்வி, ஆராய்ச்சி, பயிற்சி ஆகியவற்றுக்கான உயர்நிலை நிறுவனம் ஒன்றை நிறுவி நடத்தத் திட்டமிட்டுள்ளது. நாட்டில் கல்வியிலும் பொருளாதாரத்திலும் பின்தங்கிய மக்களுக்கு வட்டி இல்லா குறு நிதி ஆதாரங்களும், நுண்கடன்களும் எளிதாக கிடைப்பதை உறுதி செய்கின்ற வகையில் நுண் கடன் நிறுவனங்களை அமைப்பதில் ஜமாஅத் முக்கியப் பங்காற்றி வருகின்றது.

  • இளைஞர் அமைப்பு


    உலகத்திலேயே இளைஞர்களை மிக அதிகமாகக் கொண்ட நாடு நம்முடைய நாடு. நம்முடைய நாட்டிலேயே இளைஞர்களை மிக அதிகமாகக் கொண்ட சமுதாயம் முஸ்லிம் சமுதாயம். இந்த நிலையில் முஸ்லிம் இளைஞர்களையும் இளம் பெண்களையும் இஸ்லாமிய அச்சில் வார்த்தெடுப்பதற்கும் சமுதாயப் புத்தமைப்பிலும் தேசக் கட்டமைப்பிலும் அவர்களின் ஆற்றல்களை மடை மாற்றுவதற்காகவும் திசை காட்டுகின்ற நோக்கத்துடனும் ஜமாஅத் பின்வரும் அமைப்புகளை நிறுவி இருக்கின்றது.

    இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (S.I.O)

    1982 இல் நிறுவப்பட்டு கடந்த நாற்பதாண்டுகளாக மூன்று தலைமுறைகளை வார்த்தெடுத்து மகத்தான சாதனை படைத்து வருகின்ற மாபெரும் மாணவர் அமைப்புதான் S.I.O. இன்று நாட்டிலேயே மிகப் பெரும் மாணவர் அமைப்பாக வளர்ந்துள்ளது.

    அகில இந்திய ஐடியல் ஆசிரியர்கள் மன்றம் (AIITA)

    சமுதாயத்தைக் கட்டமைப்பதிலும் எதிர்காலத் தலைமுறையினரை உருவாக்குவதிலும் ஆசிரியர்களின் பங்கு மகத்தானது. தேசத்தின் தலைவிதி வகுப்பறைகளில்தான் தீர்மானிக்கப்படுகின்றது என்றும் சொல்வார்கள். இந்த நிலையில் ஆசிரியர்களை ஒருங்கிணைத்து சமூகப் புத்தமைப்பிலும் தேசத்தை வார்த்தெடுப்பதிலும் அவர்களுக்கு இருக்கின்ற பொறுப்புகள், கடமைகள் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்துகின்ற நோக்கில் All India Ideal Teachers Association (AIITA) செயல்பட்டு வருகின்றது.

    இஸ்லாமிய மாணவியர் அமைப்பு (G.I.O.)

    இளம் மாணவிகளையும் இளம் பெண்களையும் சமூகத்தைக் கட்டமைக்கிற அறப்பணியில் களம் இறக்குகின்ற திட்டத்துடன் இந்திய மாணவியர் இஸ்லாமிய அமைப்பு (G.I.O) 2006இல் தொடங்கப்பட்டது.

  • மக்கள் சேவை


    வறுமை, கல்லாமை, நோய், பசி, வேலைவாய்ப்பின்மை போன்றவற்றை ஒழிக்கின்ற பணிகளில் ஜமாஅத் தொடக்கத்திலிருந்தே முழுமூச்சுடன் ஈடுபட்டு வந்துள்ளது.

    எதிர்பாராத நிலையில் மக்களைத் தாக்கி பெருநாசம் விளைவிக்கின்ற பெருவெள்ளங்கள், சுனாமி, நிலநடுக்கம், ஆள்கொல்லி பெருந்தொற்றுகள், பேரிடர்கள் போன்ற நெருக்கடிகளுக்கு நாடும் நாட்டு மக்களும் ஆளாகின்ற போதும் தீவிபத்துகள், கலவரங்கள், சூறையாடல்கள் என்று தீயசக்திகள் பேயாட்டம் போடுவதால் நடக்கின்ற இடர்களின் போதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதம், சாதி, இனம், குலம், கோத்திரம் போன்ற எந்தவொரு வேறுபாடும் இல்லாமல் உடனடி உதவிகளை வழங்குவதிலும் துயர் துடைப்பதிலும் ஜமாஅத் முத்திரை பதித்துள்ளது. அதற்கும் மேலாக வாழ்வாதாரங்களை மீட்டுக் கொடுத்து அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதிலும் ஜமாஅத் மிகப்பெரும் அளவில் திட்டம் வகுத்துச் செயலாற்றி வந்துள்ளது.

    குறிப்பாக சுனாமியால் நிலைகுலைந்து நின்ற மக்களின் துயர் துடைப்பதற்கு ஜமாஅத் களம் இறக்கிய தமிழ்நாடு ரிலீஃப் கமிட்டி என்கிற மக்கள் நல மன்றம் உணவு தானியங்கள், துணிமணிகள், சமையல் பாத்திரங்கள், போர்வைகள், சோப், படுக்கை விரிப்புகள், பக்கெட் உள்ளிட்ட வீட்டுப் பொருள்கள் போன்ற நாற்பதுக்கும் மேற்பட்ட உருப்படிகளைக் கொண்ட துயர் துடைப்புப் பேழைகளை(Relief Kits) ஏழாயிரம் குடும்பங்களுக்கு வழங்கியதும் நாகூரில் அரசு ஒதுக்கிய நிலத்தில் படுக்கை அறை, சமையல் அறை, ஹால் ஆகியவற்றைக் கொண்ட, நேர்த்தியாக கலை எழிலுடன் வரிசையாகக் கட்டப்பட்ட நூறு வீடுகளையும் அதே போன்று கோட்டக்குப்பத்தில் முப்பத்து எட்டு வீடுகளையும் கட்டிக் கொடுத்ததும் அப்போதைய நாகப்பட்டின மாவட்ட ஆட்சியரை நெஞ்சம் நெகிழச் செய்துவிட்டது. 'ஜமாஅத்தின் சேவைகளுக்கு தலைவணங்குகின்றேன்' என்று அவர் சொன்னது குறிப்பிடத்தக்கதாகும்.